

தமிழ்நாட்டில் மொத்தம் 1,100 சினிமா தியேட்டர்கள் உள்ளன. தற்போது அனைத்து தியேட்டர்களிலும் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருகின்றன. இதற்கான கட்டணத்தை பட தயாரிப்பாளர்களே கொடுத்து வருகிறார்கள்.
இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது. விளம்பர கட்டணத்தையும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களே பெற்றுக் கொள்கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் நிலை உள்ளது.
திரையங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடும் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்கக் கோரி பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட அதிபர்கள் போராட்டத்தால் மார்ச் 1-ந் தேதி முதல் தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் மார்ச் 16-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடந்து வருவதால் தமிழ் திரையுலகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. திரையரங்குகளிலும் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்கள் மட்டுமே அவ்வபோது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. #TFPC #TamilCinemaStrike