‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்

‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்
ஒரு தலை ராகம் படத்தின் போஸ்டர், இப்ராஹிம்
ஒரு தலை ராகம் படத்தின் போஸ்டர், இப்ராஹிம்
Published on

1980-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஒரு தலை ராகம்’. டி.ராஜேந்தர் எழுதியிருந்த, இப்படத்தின் கதையை படமாக இயக்கி, தயாரித்திருந்தார் இப்ராஹிம். இப்படம் வெற்றி பெற்றதோடு, டி.ராஜேந்தர் எனும் பன்முக திறமை கொண்ட கலைஞனையும் உருவாக்கியது. அதன்பின் ஓரிரு படங்களை மட்டும் தயாரித்தார் இப்ராஹிம். 

இந்நிலையில் இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஒரேநாளில் நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், தயாரிப்பாளர் இப்ராஹிம் என அடுத்தடுத்து மூன்று பேர் மரணமடைந்தது, தமிழ் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்ராஹிம் மறைவுக்கு டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “1980ல் வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன். காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர். என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர். 

வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர். என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார். இந்த உலகை விட்டு பிரிந்தார். கண்ணீர் கண்களை நனைக்கிறது. என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறிக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com