

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், சித்தார்த், கவுஞர் வைரமுத்து என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சிவக்குமாரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண்.
68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம்.
ராகதேவன் இளையராஜாவுக்கு
அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இல்லை.
அந்த விருதுக்கு ராஜாவால்
கௌரவம் கிடைத்துள்ளது.
பஞ்சு அருணாசலம் அவர்களால்
'அன்னக்கிளி'- படத்தின் மூலம்
தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர்.
அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து
படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக
இருந்திருக்கிறார் .
எனது 100-வது படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி '-' சிந்துபைரவி '-
படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது.
தன் வாழ்நாளை இசைக்காகவே
அர்ப்பணித்த அபூர்வ கலைஞர்.
அவரால் கலையுலகும் தமிழகமும்
இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
எத்தனை விருதுகள் கொடுத்தாலும்
அவர் இசையுலகில் சாதித்ததற்கு
அவை ஈடாக முடியாது.
வாழ்க இசைஞானி .
ஓங்குக அவர் புகழ் !!
⁃சிவகுமார்
⁃திரைப்படக்கலைஞர்
இவ்வாறு கூறியிருக்கிறார்.