பங்களாவிற்கு சென்ற இளைஞர்கள் கதை - சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்

கிராந்தி பிரசாத் இயக்கத்தில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’ விமர்சனம். #SanthoshathilKalavaram
பங்களாவிற்கு சென்ற இளைஞர்கள் கதை - சந்தோஷத்தில் கலவரம் விமர்சனம்
Published on

ஒரே கல்லூரியில் படித்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு பங்களாவிற்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்கள். இதில் ஒருவர் ஆன்மீகம், தியானம் பற்றி நிறைய தெரிந்தவர். அந்த பங்களாவில் ஒரு ஆவி இருப்பதை இவர்களுக்கு தெரிய வருகிறது.

அந்த ஆவி இவர்களை வெளியே போக விடாமல் தடுக்கிறது. மேலும், நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய துடிக்கிறது. அந்த ஆவி யார்? எதற்காக நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய துடிக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக் என புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இதில் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் நிரந்த் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். மற்றவர்கள் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். ரவி மரியா இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். 

வழக்கமான பேய் படக் கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கிராந்தி பிரசாத். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், அவர்களுக்குள் ரொமான்ஸ், சண்டை என வழக்கமான திரைக்கதை. பேய் படங்களுக்கு உரித்தான பங்களா என அதே டெம்ளேட்டுடன் படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், பாசிடிவ் வைப்ரேஷன் நம்மிடம் இருந்தால், எந்த தீய சக்தியும் ஒன்றும் செய்யாது என்று சொல்லியிருக்கிறார்.

இப்படத்துக்கு பவுலியஸ் என்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பணியாற்றியவர். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. படத்திற்கு பலம் என்றும் சொல்லலாம். சிவநக் இசையில் அனைத்தும் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ சந்தோஷம் குறைவு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com