மகாபாரதத்தை படமாக்க ராஜமவுலி ஆர்வம்

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, தனக்கு மகாபாரதத்தை படமாக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி
ராஜமவுலி
Published on

ராமாயணம், மகாபாரதம் தூர்தர்ஷனில் ஏற்கனவே தொடர்களாக வந்து வரவேற்பை பெற்றன. தற்போது கொரோனா ஊரடங்கிலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு அதிகமானோரை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ‘பாகுபலி’ படம் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இயக்குனர் ராஜமவுலி, ராமாயணத்தை படமாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வற்புறுத்தினர். ஆனால் அவர் மகாபாரதம் கதையை படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ராஜமவுலி அளித்துள்ள பேட்டி வருமாறு: “கொரோனா ஓய்வில் இருப்பதால் ராமாயணம் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று பலரும் என்னை வற்புறுத்துகின்றனர். ஆனால் எனக்கு மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கொரோனா ஓய்வில் அந்த படத்துக்கான வேலையை ஆரம்பிக்கலாம் என்றால் அது அவ்வளவு எளிதானது அல்ல. 

அதற்கு நிறைய நேரம் வேண்டும். முழு கவனத்தை அதிலேயே ஈடுபடுத்த வேண்டும். இப்போது நேரம் கிடைத்துள்ளது என்று செய்தாலும் வேறு பணிகளில் இருந்து அது திசை திருப்பிவிடும். மகாபாரதம் படத்தை எடுக்க அதிக உழைப்பு தேவை. மகாபாரதம் எனது கனவு படம். அதை எப்படியும் படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன்”. இவ்வாறு ராஜமவுலி கூறினார்.

பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரும் தமிழ், தெலுங்கில் இருந்து மேலும் பல நடிகர்களும் மகாபாரதம் படத்தில் நடிப்பார்கள் என்றும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com