‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு

எது பற்றியும் கவலை கொள்ளாமல் 64 வருடங்களாக இந்தியர்களின் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக நம் அரசியல்வாதிகள் மாறியிருப்பதாக பார்த்திபன் சாடியிருக்கிறார்.
Published on

நடிகர் கமல்ஹாசன் சமூக பிரச்சினைகள் குறித்த தனது கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். அரசியல் பிரச்சினைகளையும் விமர்சிக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்து இருக்கிறார்.

ரஜினிகாந்தும், நமது அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். தேவைப்படும் போது களத்தில் இறங்குவேன் என்றும் அறிவித்தார். அவர் அரசியல் தொடங்குவாரா? என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஷால் திடீர் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். எந்த கட்சியையும் சாராமல் மக்களுக்கு சேவை செய்வேன் என்றார் கமல், ரஜினிக்கு முன்பாகவே அரசியலில் குதிப்பதற்காகவே விஷால் முன்னோட்டம் பார்க்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவருடைய வேட்பு மனு ஏற்கப்படவில்லை.

விஷால் மனு ஏற்கப்படாததற்கு அரசியல் தலையீடுதான் காரணம் என்று விமர்சனம் எழுந்தது. திரைப்பட துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்தனர்.

தனது மனு நிராகரிக்கப்பட்டது உள் நோக்கம் கொண்டது. கோர்ட்டுக்குப் போவேன். சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பேன். ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை கடுமையாக தாக்கியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

யாகாவாராயினும் நாகாக்க, அன்னியர் மீது பல்போட்டு பேசிய வாக்கை காக்க.... எது பற்றியும் கவலை கொள்ளாமல் 64 வருடங்களாக இந்தியர்களின் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக நம் அரசியல்வாதிகள்.

இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

அதே பக்கத்தில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் ரவுடிகள், முறைகேடானவர்கள் கையில் அதிகாரம் செல்லும். தண்ணீ, காற்றுக்கு கூட வரி விதிக்கும் நிலைமை இந்தியாவில் உருவாகும்’ என்று கூறியதையும் வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்களை விமர்சனம் செய்த இந்திய அரசியல்வாதிகள், கடந்த 64 வருடங்களில் இந்திய மக்களின் வாக்குகளை கூட்டமாக ஏப்பமிடும் காக்கைகளாக மட்டுமே இருக்கிறார்கள். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை குறிப்பிடும் வகையில் இந்த கருத்தை பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com