10 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்துடன் இணைந்த இளையராஜா

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரசாந்த், இளையராஜா
பிரசாந்த், இளையராஜா
Published on

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. 

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். மோகன் ராஜா இயக்கவுள்ள இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக பிரசாந்த் 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக பிரசாந்தின் பொன்னர் சங்கர் படத்திற்கு இசையமைத்திருந்த இளையராஜா, இந்த படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைய உள்ளனர். படத்தின் கதைப்படி நாயகன் பியானோ இசை கலைஞர் என்பதால், இதற்காக நடிகர் பிரசாந்த் 6 மாதம் பியானோ பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com