

இந்த வழக்கில் பிரபல ரவுடி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் படி நடிகர் திலீப்பும் கைதானார். அவர், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதனால் அவர், ஜெயிலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் முக்கிய தடயமான செல்போன், அதில் பதிவான நடிகையின் பலாத்கார காட்சிகளை கைப்பற்ற போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக நடிகர் திலீப்புடன் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் சம்மன் அனுப்பி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். இது தவிர திலீப்பின் 2-வது மனைவி காவ்யாமாதவன், அவரது தாயார் ஷியாமளா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ், பிரபல பாடகி ரிமிடோமி, நடிகர் சித்திக் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. ஆனாலும் ஆபாச காட்சிகள் பதிவு செய்யப்பட்ட மெமரி கார்டும், செல்போனும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே போலீசார் இப்போது நடிகர் திலீப் மீதான புகாருக்கு வலுவான ஆதாரங்களை திரட்டுவதில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். கடத்தப்பட்ட நடிகை மீது திலீப்புக்கு முன்பே முன் விரோதம் இருந்ததும், அந்த நடிகையை அவர், கடந்த 2013-ம் ஆண்டே கடத்த முயன்றதையும் நிரூபிக்க சாட்சியங்களை தயாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சு வாரியாரின் சகோதரர் மதுவாரியாரை போலீசார் நேற்று விசாரித்தனர். திலீப்புக்கும், நடிகைக்கும் இருந்த முன் விரோதம் எந்தெந்த சூழ்நிலைகளில் அதனை திலீப் வெளிப்படுத்தினார் என்பது பற்றி கேட்டறிந்தனர்.
இதுபோல நடிகையின் நெருங்கிய தோழியான சரிதா சிவதாஸ் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். நடிகை கடத்தப்பட்ட சம்பவம் நடந்த பின்னர் நடிகை, இவரது வீட்டிற்குதான் சென்று பல மணி நேரம் தங்கி இருந்தார். அப்போது திலீப் குறித்து நடிகை ஏதாவது கூறினாரா? அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட என்ன? காரணம் என்பது பற்றி போலீசார் சரிதா சிவதாசிடம் கேட்டறிந்தனர்.
போலீசாரின் விசாரணை குறித்த தகவல்களை வெளியிட உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதே நேரம் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் விரைவில் கைது ஆவார்கள் என்பதை மட்டும் சூசகமாக தெரிவித்தனர்.