

புதுமுகம் சஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். ஓவியா நாயகியாக நடித்துள்ள இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பவர்ஸ்டார், ராதாரவி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - சினேகன், ஒளிப்பதிவு - நாகராஜ், தயாரிப்பு - மதுரை செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜதுரை.
படம் பற்றி தயாரிப்பாளர் மதுரை செல்வம் கூறுகிறார்...
“ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு மதுரை வரும் புதுமுக ஹீரோ சஞ்சீவி, மோசடி பேர்வழி பவர் ஸ்டாரிடம் ஏமாந்து போகிறார். தனது புத்திசாலி தனத்தை பயன்படுத்தி இழந்ததை எப்படி மீட்கிறார் என்பது கதை.
ஓவியா 28 நாட்கள் நடித்துக் கொடுத்தார். முதலில் புதுமுக ஹீரோ என யோசித்தவர், கதையை கேட்டு ‘ஓகே’ சொல்லி விட்டார். எம்.ஜி.ஆரால். பெயர் சூட்டப்பட்ட சீதா என்ற யானை முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. யானைப்பாகனாக செந்தில் வருகிறார்.