சினிமா முன்பதிவு கட்டணம் ரத்து அபிராமி ராமநாதன் அறிவிப்பு

சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார்
சினிமா முன்பதிவு கட்டணம் ரத்து அபிராமி ராமநாதன் அறிவிப்பு
Published on

தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் ரூ.153 ஆக உயர்ந்தது. மேலும் சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது 30 சதவீதம் கூடுதலாகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.200-ஐ நெருங்கி விடுகிறது. இதன் காரணமாக தியேட்டரில் சினிமா பார்க்க வருபவர்களின் கூட்டம் குறைந்துவிட்டது.

வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா தியேட்டர்கள் நிரம்பி வழியும். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை.

4 பேர் கொண்ட குடும்பத்தினர் படம் பார்க்க செல்லும் போது டிக்கெட் கட்டணம் மட்டும் ரூ.800-ஐ தொட்டுவிடுகிறது. பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன், குளிர்பானம் செலவு என ரூ.1800 வரை ஆகிறது. இந்த செலவு இதோடு நின்று விடுவதில்லை.

தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் ஓட்டல்களில் சாப்பிடவே விரும்புவார்கள். அதற்கும் ஜி.எஸ்.டி. என கிட்டத்தட்ட வார இறுதி நாட்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியில் சாப்பிட சென்றால் கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது.
இதனால் குடும்பத் தலைவர்கள் மிரண்டு போய் உள்ளனர். எனவே வார இறுதி நாட்களிலும் சினிமா பார்க்க செல்வதை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். இதனால் தான் சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறையக் காரணம்.

எனவே சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை அபிராமி ராமநாதன் ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப் பால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 30 சதவீதம் செலவாகிறது. எனவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. ரசிகர்கள் பாதிக்காமல் இருக்க அபிராமி மாலில் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரத்து செய்கிறேன். இது மற்ற தியேட்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து அபிராமி ராமநாதனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

தற்போது சினிமாத்துறை சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றான சினிமா டிக்கெட் ஆன்லைன் பதிவு முறையை தங்களது திரையரங்கில் ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு முன்னோடியாக செயல்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com