`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை நடிகர் விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Published on

‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. 

வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீசரை தொடர்ந்து, `என்னடா நடக்குது நாட்டுல' என்ற சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்து சேர்ந்த விஜயகாந்த் `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 

#சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் திரைப்படம் 2018 பொங்கல் பண்டிகையன்று வெளிவருகிறது. இப்படத்தின் #என்னநடக்குதுநாட்டுல பாடல் நாட்டின் த‌ற்போதைய அவல நிலையை தோலுரித்துக் காட்டுவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இப்பாடல் ஒலிபரப்பப்படுகிறது. இப்பாடலை இயற்றிய கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் முத்தையாவுக்கும், மதுரவீரன் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜி.முத்தையா இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com