கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - நடிகர் நிவின்பாலி உருக்கமான கடிதம்

தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டி நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். #KeralaFloods #NivinPauly
கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - நடிகர் நிவின்பாலி உருக்கமான கடிதம்
Published on

கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். 

பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மக்களுக்கு உதவும்படி நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

" "கடவுளின் தேசம்" எனப்படும் கேரளாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதிலும், கேரளா "இந்தியா" என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் மிக மிக பெருமை கொண்டிருந்தேன், என்றும் பெருமைபட்டு கொண்டே இருப்பேன் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இன்று, எங்களது அழகிய கேரளா வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்காணோர் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வீடு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். என் மாநில மக்கள் நிலைமை என் மனதை பிசைகிறது. இந்த நேரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது என் தேசத்தின் ஒற்றுமை தான். 

வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள, என் தேசத்து மக்கள் என் மாநிலத்தையும், என் மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து வீறுகொண்டு எழுந்து மீண்டும் கேரளா ராஜநடை போடும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் உடனடியான தேவைகள் அவசியம் என்பதால் தான் இந்த கோரிக்கை. 

உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவய பொருட்களை உடனடியாக கேரளா மக்களுக்கு அனுப்புங்கள். யார்  மூலமாக என்பது முக்கியம் இல்லை, உடனடியாக  வந்து சேர வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். "கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும்" என்கிற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன். பிராத்திக்கிறேன். கை கூப்பி வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #KeralaRain #NivinPauly

X

Maalai Malar
www.maalaimalar.com