சாதியற்ற இளம் தலைமுறையை உருவாக்க முயலும் சசிகுமார் - நாடோடிகள் 2 விமர்சனம்

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் விமர்சனம்.
நாடோடிகள் 2
நாடோடிகள் 2
Published on

சமூக அக்கறையுடன் இருக்கும் சசிகுமார், மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு குரல் கொடுக்கிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார். அஞ்சலி, பரணி மற்றும் பெரியவர் ஒருவர் சசிகுமாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சாதியற்ற இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சசிகுமாருக்கு தான் சார்ந்த சாதியிலிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. இதனால் சொந்த தாய்மாமா உள்பட யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். 

இவ்வாறு இருக்கையில், தன்னை தேடி வந்து யாராவது பெண் கொடுத்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கிறார் சசிகுமார். இந்த சூழலில், சசிகுமார் சாதியைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவியை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தன்று இரவு சசிகுமாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன?  சாதியற்ற இளம் தலைமுறை என்ற சசிகுமாரின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சசிகுமார், நாடோடிகள் முதல் பாகத்தை போன்று அதே துறுதுறு நடிப்புடன் வருகிறார். சமுத்திரகனியின் கருத்துகளை பேச இவரைவிட யாரும் செட் ஆக மாட்டார்கள் என தோன்றும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். சசிகுமார்-அஞ்சலி இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. 

செங்கொடி எனும் கதாபாத்திரத்தில் வரும் நாயகி அஞ்சலி, போராட்டத்தில் இறங்கி குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாகவும், சசிகுமாருக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். சசிகுமாருக்கும் இவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ். 

இதேபோல், பரணியின் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடிவமைத்துள்ள விதம் சிறப்பு. காதலர்களாக வரும் அதுல்யா ரவி, இசக்கி மற்றும் போலீசாக வரும் திருநங்கை நமீதா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். 

சாதி ஒழிப்பு என்பதை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ள சமுத்திரகனி, ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி விரிவாகப் பேசாமல், நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளையும்  படத்தில் புகுத்தி இருப்பது பின்னடைவாக அமைகிறது. 

ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. இருப்பினும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றது. ஏகாம்பரத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.   

மொத்தத்தில் ‘நாடோடிகள் 2’ சாதிக்கு எதிரான சாட்டையடி.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com