மெர்சல் அதிக கட்டண விவகாரம்: தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்துக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மெர்சல் அதிக கட்டண விவகாரம்: தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
Published on

சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன். ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறி இருப்பதாவது:-

பெரிய நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாகும் போது, அந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து முதல் 5 நாட்களுக்கு அதிக தொகையை கட்டணமாக தியேட்டர் நிர்வாகம் வசூலிக்கிறது.

ரஜினியின் கபாலி, விஜய்யின் பைரவா, சூர்யாவின் சிங்கம்-3 உள்ளிட்ட திரைப்படங்களை பார்க்க வந்த ரசிகர்களிடம் குறைந்தது ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்பட்டது.

இதுபோன்ற செயலை தடுக்கும் விதமாக, தீபாவளி அன்று வெளியாகும் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அப்படத்தை வெளியிடும் தியேட்டர் உரிமையாளருக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும், மெர்சல் படத்தயாரிப்பாளர் சார்பில் வக்கீல் விஜயனும் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு பொதுநல வழக்கு தன்மையுடன் உள்ளதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com