பெரியார் விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன் - மீரா கதிரவன்

திராவிட கழகம் சார்பில் இயக்குநர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மீரா கதிரவன், இதனை தனது வாழ்வின் உயரிய விருதாக கருதுவதாக கூறினார். #MeeraKathiravan #PeriyarAward
பெரியார் விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன் - மீரா கதிரவன்
Published on

`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறும்போது,

என்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியிருகின்றன. எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசி, திரைக்கு வருவதற்கு முன்பே துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது. இப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த பெரியார் விருதானது கடந்த 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது. சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள்  ராஜு முருகன், கோபி நயினார், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்  பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து, பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள். மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்லாவற்றையும் கடந்து மனிதர்களாக வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன். 

இந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். #MeeraKathiravan #PeriyarAward

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com