மேச்சேரி வன பத்ரகாளி

கே.எம்.ஆனந்தன் இயக்கத்தில் மணீஷ் - சந்தியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மேச்சேரி வனபத்ரகாளி' படத்தின் விமர்சனம்.
மேச்சேரி வன பத்ரகாளி
Published on

கோவிலில் பாம்பு கடித்ததால் மனைவியை இழந்த பூசாரியான கே.எம்.ஆனந்தன் அன்று முதல் கோவிலுக்கு செல்வதை நிறுத்துகிறார். மாறாக மது அருந்துதல், பிகைப்பிடித்தல் என மாறிவிடுகிறார். அம்மன் மீது தீவிர பக்தியோடு இருக்கும் ஆனந்தனின் மகளான சந்தியாவை, வில்லனின் மகன் காதலித்து வருகிறார். அதே நேரத்தில் ஆனந்தனின் மகன், வில்லனின் மகளை காதலித்து வருகிறார்.

இதில் சந்தியாவுடன் பேசிக்கொண்டிருப்பதை அவரது காதலரின் அப்பா பார்த்து விடுகிறார். இந்நிலையில், மந்திரவாதி ஒருவர்,  மேச்சேரி வனபத்ரகாளி அம்மனின் சிலைக்கு கீழே புதையல் இருப்பதாகவும், அதை எடுத்தால் அவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் கூற, அதற்கு முன்னதாக திருமணம் ஆகாத பெண் ஒருவரை பலி கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அந்த மந்திரவாதியின் பேச்சை கேட்டு, தனது மகனை காதலிக்கும் சந்தியாவை கடத்தி வந்து பலி கொடுக்க முயற்சி செய்யும் போது, சந்தியா அங்கிருந்து தப்பித்துச் சென்று மலை மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய, சந்தியாவின் தோற்றத்தில் அவளது வீட்டிற்கு அம்மன் வருகிறது.

இதையடுத்து, சந்தியாவை கொல்ல முயற்சி செய்தவர்களுக்கு அம்மன் என்ன தண்டனை கொடுத்தது? அம்மன் சிலைக்கு கீழே இருந்த புதையல் என்ன ஆனது? ஆனந்தனின் மகனின் காதல் வெற்றி பெற்றதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

கே.எம்.ஆனந்தன், மணீஷ், சந்தியா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும், கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நடிகை சீதா அம்மனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

வழக்கமான பழிவாங்குதல் கதையை மையமாக வைத்து மேச்சேரி பத்ரகாளி அம்மன் படத்தை இயக்கியிருக்கிறார் கே.எம்.ஆனந்தன். படத்தின் கதை வழக்கமானதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை சற்று வித்தியாசமாகவே அமைத்திருக்கிறார். இருப்பினும் அந்த வித்தியாசம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சாமியை மையமாக வைத்து பல பழிவாங்கும் படங்கள் வந்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக இந்த படம் அமையவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆதிஷ் உத்ரியனின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை ஓரளவுக்கு பலம் சேரத்திருக்கிறது.  

மொத்தத்தில் `மேச்சேரி வன பத்ரகாளி' வழக்கமானவள்.

X

Maalai Malar
www.maalaimalar.com