மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மலையாள இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்
Published on

மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவர் மஞ்சுவாரியர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தார்.

அதில், “என் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், என்னை மிரட்டும் வகையிலும் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்பி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர், நிருபர்களிடம் கூறும்போது, “போலீஸ் விசாரணையின்போது என் தரப்பு நியாயத்தை தெரிவித்து இருக்கிறேன். அவர்கள் அதை பதிவு செய்து உள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்றார்.

கடந்த ஆண்டில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய ‘ஒடியன்’ என்ற மலையாள படத்தில், நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து இருக்கிறார். மேலும் அவர் இயக்கிய பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com