பெத்த மகனை கட்டிப்பிடிக்க முடியலையே... கொரோனா பாதித்த மணிரத்னம் பட நடிகை வேதனை

கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டில் தனிமையில் இருக்கும் பிரபல நடிகை ஒருவர், பெத்த மகனை கட்டிப்பிடிக்க முடிய வில்லையே என வேதனையுடன் கூறி உள்ளார்.
மலைக்கா அரோரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள்
மலைக்கா அரோரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள்
Published on

கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

அந்த வகையில், தயாரிப்பாளர் போனிகபூர் மகனும் இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கும், திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழும் பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோராவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக தனிமையில் உள்ளதால், தனது மகனை கட்டிப்பிடிக்க கூட முடியவில்லையே என்று வருத்தமாகக் கூறியுள்ளார். தன் மகன் அர்கான் மற்றும் செல்ல நாய்க்குட்டியின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது: சமூக விலகல் மற்றும் கட்டாய தனிமை காரணமாக இன்னும் சில நாட்கள், என் குழந்தைகளை என்னால் கட்டித் தழுவ முடியாது. இருப்பினும் அவர்களின் இனிமையான முகங்களை பார்க்கும் போது எனக்கு உற்சாகத்தையும் சக்தியையும் தருகிறது என்று கூறியுள்ளார்.

நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்கான் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அர்பாஸ்கானை பிரிந்த மலைக்கா அரோரா தனது மகனுடன் வசித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் இடம் பெற்ற தைய தைய தைய்யா தைய்யா பாடலுக்கு மலைக்கா நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com