

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், சாகித்கபூர் நடித்த பத்மாவத் வெளியானது.
இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தையும், ராணி பத்மாவதியையும் இழிவு படுத்துவதாக கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு நடந்தபோது ரகளையில் ஈடுபட்டு இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலியை தாக்கி பொருட்களை சூறையாடினர்.
ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே நாக்கை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் கோர்ட்டு உத்தரவுப்படி பத்மாவத் படம் சமீபத்தில் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கர்னி சேனா அமைப்பினர் கலவரம் செய்தனர்.
வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பள்ளி குழந்தைகள் சென்ற வேன் மீது கற்கள் வீசப்பட்டன.
இந்த நிலையில் பத்மாவத் படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கர்னிசேனா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கர்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் பத்மாவத் படத்தை மும்பையில் பார்த்தனர். படத்தில் எங்கள் மனம் புண்படும்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ராஜபுத்திர வம்சத்தை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் படம் உள்ளது.
பத்மாவதிக்கும், கில்ஜிக்கும் இடையே நடைபெறும் காட்சிகள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. அதனால் எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.
பத்மாவத் படத்தை ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. #Padmaavat #DeepikaPadukone #RanveerSingh