படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம்: கமல், ரஜினி பட இயக்குனர்

படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் என்று கமல் மற்றும் ரஜினியை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார் பட விழாவில் கூறியிருக்கிறார்.
படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம்: கமல், ரஜினி பட இயக்குனர்
Published on

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த “கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா” என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எனக்கு இந்தப் படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வெஞ்சர் அனுபவம் தான். அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு புரடியூஸ் செய்வது. படப்பிடிப்பு தளங்களில் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாய் இருந்தது. இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வந்து, நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்” என பேசினார்.

தற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், விஜயகாந்த்தை வைத்து ‘சின்ன கவுண்டர்’, கமல்ஹாசனை வைத்து ‘சிங்கார வேலன்’, ரஜினிகாந்த்தை வைத்து ‘எஜமான்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com