

திருவனந்தபுரம்:
மலையாள படஉலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் மோகன்லால். இவரது மகன் பிரணவ். இவர் தற்போது ‘ஆதி’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக இருப்பவர் பிரியதர்ஷன். இவரும் மோகன்லாலும் மிக நெருங்கிய நண்பர்கள். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.
இதனால் மோகன்லால் மற்றும் டைரக்டர் பிரியதர்ஷன் குடும்பத்தினரும் நட்புடன் பழகி வருகிறார்கள். ஓணம் மற்றும் பண்டிகை நாட்களில் ஒருவர் வீட்டில் நடக்கும் விருந்திற்கு மற்றவர் செல்வது என்று அவர்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் மோன்லாலின் மகன் பிரணவ் மற்றும் டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் நடிகை கல்யாணி இடையே காதல் ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் மலையாள பட உலகில் கிசு, கிசு பரவி வருகிறது.
இந்த நிலையில் நடிகை கல்யாணி ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி உள்ளார். தன்னையும், நடிகர் பிரணவையும் இணைத்து மலையாள பட உலகில் கிசு கிசுக்கப்படும் காதல், திருமணம் தொடர்பாக நடிகை கல்யாணி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது தந்தை பிரியதர்ஷனும், நடிகர் மோகன்லாலும் திரையுலகை தாண்டி நெருங்கிய நண்பர்கள். அதுபோல அவர்களது வாரிசுகளான நாங்களும் நட்புடன் பழகி வருகிறோம். நடிகர் பிரணவின் போட்டோவை அவரது சகோதரி எனது செல்போனுக்கு அனுப்பியிருந்தார். அதை நான் எனது பெற்றோருக்கு அனுப்பிவைத்தேன்.
இதைதொடர்ந்து எனது தாயும் பிரணவின் தாய் சுசித்திராவும் அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு நமது பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்களோ என்று ஒருவருக்கொருவர் சிரித்து உள்ளனர்.
பிரணவ் தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற எண்ணம் இல்லாதவர். அவரிடம் பந்தா என்பது துளிகூட கிடையாது. அவர் ஆதி படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரது கைகள் மிகவும் மென்மையானது. ஆதி படத்திற்காக மலையேறும் பயிற்சி உள்பட உடற்பயிற்சிகள் செய்து தன்னை மிகவும் வருத்திக்கொண்டுள்ளார். பிரணவுக்கு ஆடம்பரம் பிடிக்காது. அனாவசியமாக பணம் செலவு செய்ய விரும்பமாட்டார்.
அவர் வெளியில் செல்லும் போது தனது பாக்கெட்டில் 500 ரூபாய்தான் எடுத்துச்செல்வார். கூடுதல் பணம் தேவைப்பட்டால் தனது வங்கி கணக்கில் 100 ரூபாய் போடும்படி கேட்டுக் கொள்வார். அந்தளவுக்கு அவர் எளிமையானவர்.
அவருக்கு சினிமா பற்றி அதிக ஆசை கிடையாது. பெரிய பண்ணை அமைக்க வேண்டும், பறவைகளுடன் இயற்கை சூழலில் நேரத்தை செலவிடவேண்டும் என்று விரும்புவார். அவர் யாருக்கும் அறிவுரை கூறவும் மாட்டார். யாரும் அறிவுரை கூறினால் அதை கேட்கவும் மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். #KalyaniPriyadharsan #PranavMohanlal