நண்பர்களின் திருமண கலாட்டா - களத்தில் சந்திப்போம் விமர்சனம்

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் விமர்சனம்.
விமர்சனம்
விமர்சனம்
Published on

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ராதாரவி நடத்தி வரும் பைனாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். ஜீவாவுக்கு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அருள்நிதி திருமணத்தை வெறுப்பவர்.

ஒரு கட்டத்தில் அருள்நிதியை கட்டாயப்படுத்தி மாமா மகள் மஞ்சிமா மோகனை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால், ஜீவா விளையாட்டிற்கு ஒரு இடத்தில் சொன்ன பொய்யால் அருள்நிதி திருமணம் நடக்காமல் போகிறது. திருமணம் நின்றதற்கு நான்தான் காரணம் என்று வருந்தி, மஞ்சிமாவை ஏமாற்றி அருள்நிதிக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.

ஆனால், அருள்நிதி திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் ஜீவா - அருள்நிதி இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அருள்நிதி திருமணம் செய்ய மறுக்க காரணம் என்ன? மஞ்சிமாவின் வாழ்க்கை என்ன ஆனது? ஜீவா - அருள்நிதி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நண்பர்களாக இருக்கும் ஜீவா, அருள்நிதி இருவருமே கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார்கள். குறும்பு, கிண்டல், நக்கல் என நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஜீவா. சண்டை, அடக்கம், அப்பாவி முகம் என அருள்நிதி அதகளப்படுத்தி இருக்கிறார். கபடி போட்டிகளில் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

அருள்நிதியின் மாமா மகளாக வரும் மஞ்சிமா மோகன், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் கூட கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகி பிரியா பவானி சங்கர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் குறைவாக வந்தாலும் நிறைவான நடிப்பு. 

பைனான்ஸ் கம்பெனி நடத்தும் ராதாரவி, வழக்கம் போல் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார். இருவருக்கு மட்டுமில்லாமல் படத்திற்கும் பெரிய பலமாக ரோபோ சங்கர், பால சரவணன் நடிப்பு அமைந்திருக்கிறது. ஆடுகளம் நரேன், இளவரசு, ரேணுகா அகியோரின் நடிப்பு கச்சிதம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டு பாடல்கள் மீண்டும் கேட்க வைக்கிறது. பின்னணி இசையில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அபினந்தன் ராமானுஜம் காரைக்குடியின் அழகை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார். 

நண்பர்கள், அவர்களின் காதல், திருமணம், கலாட்டா என குடும்பங்கள் ரசிக்கும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். இரண்டு நாயகர்களுக்கும் சமமான வேடம், காட்சிகள் கொடுத்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். எதிர்பார்க்காத இடங்களில் கூட காமெடி வைத்து திரைக்கதையை சிறப்பாக நகர்த்தியதற்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் ‘களத்தில் சந்திப்போம்’ காமெடி களம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com