காலக்கூத்து

எம்.நாகராஜன் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன் - தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாகி இருக்கும் `காலக்கூத்து' படத்தின் விமர்சனம். #Kaalakkoothu
காலக்கூத்து
Published on

பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே காதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை மறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார். 

ஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம் தவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு அவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் கவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.

மற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன் திருமணம் செய்துக் கொள்கிறார். கோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன், தன்ஷிகா இருவரும் தப்பித்தார்களா? கவுன்சிலர் மகனிடம் இருந்து பிரசன்னா தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா, சோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால், இவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.

மற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ் என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

முதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும், மதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார். கலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். இரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து சென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது போல் தோன்றுகிறது.

மதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக வேகம் எடுத்திருக்கிறது. பழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி இருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது பலவீனம். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘காலக்கூத்து’ ஆடியிருக்கலாம். #Kaalakkoothu #KaalakkoothuReview #Prasanna #Kalayarasan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com