பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் காப்புரிமை பற்றி குற்றவியல் வழக்கின் தீர்ப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்து இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். #Ilayaraja
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
Published on

இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்கள் பற்றிய காப்புரிமை வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:-

நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த கோர்ட்டால் பிறப் பிக்கப்பட்ட தடை செல்லும்.

அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும். நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன்.

சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.

அதில் நீதிபதி எக்கோ நிறுவனம் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என்று அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சிலர் என்னுடைய வழக்கே ரத்து என்று செய்தி வெளியிடுகிறார்கள். 4 ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Ilayaraja

X

Maalai Malar
www.maalaimalar.com