இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கேட்டு வழக்கு - தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஒரு தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Ilayaraja75 #ProducersCouncil
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கேட்டு வழக்கு - தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Published on

சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கம், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை வருகிற பிப்ரவரி 2-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு பணிகளுக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளனர். இந்த நிதி எவ்வாறு திரட்டப்பட்டது? என்பது தெரியவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் ரூ.7 கோடி நிதி திரட்டப்படும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கூறினாலும், அதற்கு உறுதியான திட்டம் அவர்களிடம் இல்லை.

தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த பணத்தை டெபாசிட் செய்யாமல், இந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். #Ilayaraja75 #ProducersCouncil

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com