

கடந்த நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பலர் லட்சத்தீவு, கேரளா, கோவா, மராட்டியம், குஜராத் மாநில கடற்கரையில் தத்தளித்தனர்.
அவர்களை கடலோர காவல் படையினரும், கடற்படை வீரர்களும் மீட்டு வருகிறார்கள். இன்னும் ஏராளமான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
10 நாட்களை கடந்தும் மீனவர்கள் மீட்கப்படாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து தவிக்கிறார்கள். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷூம் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நம் தமிழ் மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் (GPS), ரேடார் (Radar), சாட்டிலைட் போன் (Satellite phone) போன்ற கருவிகள் மானியத்திலும் தவணை முறையிலும் அரசு வழங்க வேண்டும். இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். இதில் அனைத்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
என்று கூறியிருக்கிறார்.