

இந்த நிலையில், பிரபல பட அதிபர் சதீஷ்குமார் என்பவரும், போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது, ரூ.15 லட்சம் கடன் தொகைக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள தனது 2 பங்களா வீடுகளை சொந்தம் கொண்டாடுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் போத்ராவும், அவரது 2 மகன்களும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மேலும், போத்ரா மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கோர்ட்டு உத்தரவை பெற்று, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக, கந்துவட்டி தடுப்பு பிரிவு எஸ்.ஐ. மீனா பிரியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போத்ராவிடம் கடன் வாங்கியவர்கள், அதற்கான தவணை பணத்தை மாதந்தோறும் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தி வந்தனர்.