எந்திரன் படத்தின் கதை திருட்டு புகார் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷங்கர், ரஜினி
ஷங்கர், ரஜினி
Published on

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் தொடர்ந்திருந்தார். 

அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில்  ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com