என்ன தவம் செய்தேனோ

கஜினி முருகன், விஷ்ணு பிரியா, ஆர்.என்.ஆர்.மனோகர் நடிப்பில் முரபா செலன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘என்ன தவம் செய்தேனோ’ படத்தின் விமர்சனம். #EnnaThavamSeitheno
என்ன தவம் செய்தேனோ
Published on

அரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட பெரும்புள்ளி, ஆர்.என்.ஆர்.மனோகர். இவர் சாதி வெறியரும் கூட, இதற்காக பல கொலைகளை செய்தவர். இவருடைய ஒரே மகள் விஷ்ணு பிரியா. இவர் மீது அதிகம் பாசத்துடன் இருந்து வருகிறார். இவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்.

மனோகர் மேல் உள்ள கோபத்தால், நான்கு பேர் விஷ்ணு பிரியாவை கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்று கற்பழிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது தெருத்தெருவாக ஐஸ் விற்கும் நாயகன் கஜினி முருகன் முரடர்களுடன் போராடி, விஷ்ணு பிரியாவை காப்பாற்றுகிறார்.

தன் மானத்தை காப்பாற்றிய கஜினி முருகன் மீது விஷ்ணு பிரியாவுக்கு காதல் ஏற்படுகிறது. தன் காதலை சொல்ல கஜினி முருகனை தேடி ஓடுகிறார். அவருடைய அப்பாவை நினைத்து பயந்து கஜினி முருகன் ஓடுகிறார். ஆனாலும் அவரை விடாமல் விஷ்ணு பிரியா துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில், விஷ்ணு பிரியாவின் காதலை கஜினி முருகன் ஏற்றுக் கொள்கிறார். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களை கொலை செய்ய ஆர்.என்.ஆர்.மனோகர் தன் அடியாட்களுடன் துரத்துகிறார்.

இறுதியில் ஆர்.என்.ஆர்.மனோகர், காதலர்களை கண்டுபிடித்தாரா?, அவரிடம் இருந்து காதல் ஜோடி தப்பியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கஜினி முருகன், நடிப்புக்கு புதுசு என்பதை அவர் தொடர்பான ஆரம்ப காட்சிகள் காட்டிக் கொடுக்கின்றன. விஷ்ணு பிரியாவின் அப்பாவுக்கு பயந்து ஓடுகிற காட்சிகளிலும், அடியாட்களிடம் உதை வாங்கும்போதும், அய்யோ பாவமாக தெரிகிறார். நாயகி விஷ்ணு பிரியா, கலையான முகம். கனமான கதாபாத்திரத்தை சுலபமாக சுமந்து இருக்கிறார். கஜினி முருகனிடம் அழுது புலம்பி தன் காதலை ஏற்றுக்கொள்ள செய்கிற காட்சியிலும், அப்பா வரப்போகிறார்... நம் பிள்ளையை கொஞ்சப் போகிறார் என்று மகிழ்ச்சியில் துள்ளும் காட்சியிலும், ஒரு மகளின் இயல்பான பாச உணர்வை முகத்தில் வெளிப்படுத்துகிறார்.

சாதி வெறியும், கொலை வெறியும் கொண்ட முரட்டுத்தனமான அப்பா வேடத்தில் பயமுறுத்தியிருக்கிறார், ஆர்.என்.ஆர்.மனோகர். அவருடைய பெரிய கண்களும், மிரட்டலான குரலும் ரத்த வெறி பிடித்த பெரிய மனிதர் வேடத்துக்கு ஆயுதங்கள் போல் அமைந்துள்ளன. சிங்கம்புலி, மயில்சாமி, ஆர்த்தி கணேஷ் ஆகிய மூவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

தேவ்குரு இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சந்திரகாந்தின் பின்னணி இசையில், வாத்தியங்களின் சத்தம் மிகையாக இருக்கிறது. முரபாசெலன் டைரக்டு செய்திருக்கிறார். காதலும் அதனால், ஏற்படும் கவுரவ கொலையையும் மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர். பார்த்த கதையும், பழகிய கற்பனைகளுமாக படத்தின் முதல் பாதி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது. இரண்டாம் பாதியில், கதை வேகம் பிடித்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘என்ன தவம் செய்தேனோ’ பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com