

அழகுக்காக தொடர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டது ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பேசப்பட்டது. மூக்கு மற்றும் உதடுகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்து அவர் தன்னை அழகுபடுத்தியதாக கூறப்பட்டது.
மயக்க மருந்து கொடுத்தே இந்த அறுவை சிகிச்சைகள் நடந்தன என்றனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில், மார்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்கவும் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அவரது உடல் நிலை சீர் குலைந்து திடீர் மரணம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்தார்கள்.
இதற்கு பிரபல இந்தி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஸ்ரீதேவி மரணம் குறித்து வதந்திகள் பரப்புகின்றனர். மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யாமலும் இதயநோய்கள் இல்லாமலும் கூட இதய செயல் இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை எனது மருத்துவர் தெரிவித்தார்.
ஸ்ரீதேவிக்கு மரணம் விதியால் ஏற்பட்டது. வதந்தி பரப்புவோர் நினைப்பது போல் அவரது மரணம் நிகழவில்லை. வலிமையான பெண்களுக்கும் சில நேரங்களில் பலவீனமான இதயங்கள் உண்டு.”