திருட்டு விசிடி பார்க்க கூடாது: தாயிடம் சத்தியம் வாங்கிய ‘சங்கு சக்கரம்’ சிறுவன்

இனிமேல் தியேட்டரில் தான் புதிய படங்களை பார்ப்பேன்.. விசிடியில் பார்க்கமாட்டேன் என சங்கு சக்கரம் படத்தில் நடித்த சிறுவனுக்கு அவருடைய தாய் சத்தியம் செய்துகொடுத்துள்ளார்.
திருட்டு விசிடி பார்க்க கூடாது: தாயிடம் சத்தியம் வாங்கிய ‘சங்கு சக்கரம்’ சிறுவன்
Published on

குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக வெளியாகும் படங்களில் நகைச்சுவை படங்களுக்கு இணையாக ஹாரர் படங்களுக்கும் பங்கு உண்டு. அந்த வகையில் இந்தமுறை குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கு சக்கரம்'. 

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சமீபத்தில் வெளியான ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பட இயக்குனர் அப்பாஸ் அக்பர் கலந்துகொண்டு பேசியபோது, எங்களது ஆறு வருட உழைப்பை ஒரேநாளில் திருட்டு விசிடிகளும் ஆன்லைன் இணையதளங்கள் சிலவும் களவாடி விடுகின்றனர் என கூறி அதற்குமேல் பேசமுடியாமல் கண்ணீர்விட்டபடி அந்த விழா அரங்கை விட்டே வெளியேறினார். 

அவரது கண்ணீரும் அவரது பேச்சும் விழாவில் கலந்துகொண்ட, ‘சங்கு சக்கரம்’ படத்தில் குட்டீஸ்களில் நடித்துள்ள ஒரு சிறுவனின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அன்றைய தினம் இரவு மௌனமாக வீட்டில் இருந்த அவனிடம் அவனது தாயார், வழக்கம்போல உனக்கு யாரை பிடிக்கும் என கேட்க, எப்போதும் அம்மாவை பிடிக்கும் என சொல்லும் அந்த சிறுவன், திடீரென ‘உங்களை எனக்கு பிடிக்கவில்லை” என கூறியதை கேட்டு அதிர்ந்துபோனாராம் அந்த தாய்.

அவனிடம் அன்பாக காரணத்தை கேட்க, சங்கு சக்கரம் விழாவில் அப்பாஸ் அக்பர் கண்ணீருடன் பேசியதை குறிப்பிட்ட சிறுவன், “நீங்கள், மற்றும் உங்களை போன்றவர்கள் புதிய படங்களை கம்ப்யூட்டரில் பார்க்கிறீர்கள். அதனால் தான் அந்த அங்கிள் போன்றவர்கள் எடுக்கும் படத்திற்கு கூட்டமும் வராமல், பணமும் கிடைக்காமல் போகிறது. நீங்கள் இப்படி இனிமேல் கம்ப்யூட்டரில் படம் பார்க்கமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து தந்தால் தான் நான் உங்களுடன் பேசுவேன். அதுவரை பேசமாட்டேன்” என பிடிவாதமாக கூறிவிட்டானாம்.

மகனின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்த அந்த தாய், உடனே ‘இனிமேல் தியேட்டரில் தான் புதிய படங்களை பார்ப்பேன்.. விசிடியில் பார்க்கமாட்டேன்’ என மகனுக்கு சத்தியம் செய்துகொடுத்தாராம். 

அந்த சிறுவனுக்கு இருக்கும் நேர்மையும், மன உறுதியும் இப்படி ஆன்லைனில், திருட்டு விசிடியில் படம் பார்க்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் சினிமா செழிக்கும் என்பது உண்மைதானே..?

X

Maalai Malar
www.maalaimalar.com