

‘பெப்சி’ தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ் திரையுலகில் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஒவ்வொருவரும் இன்னொருவரை சார்ந்து இருப்பதுதான், சினிமா. யாரோ ஒரு தொழிலாளி செய்த தவறுக் காக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் அனைத்து துறைகளிலும் வேலை செய்கிறார்கள். இது, சினிமாவிலும் தொடர்ந்தால் எப்படி? ஏற்கனவே பணச் செல்லாமை, ஜி.எஸ்.டி, வறட்சி, மழையின்மை, நதி நீர் கிடைக்காமல் விவசாயிகள், நெசவாளிகள், சிறு குறு தொழிலாளர்கள் என தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தொழில்நுட்பம், கடுமையான உடல் உழைப்பை கொடுத்து ஹாலிவுட் தரத்தை மிஞ்சுகிற அளவுக்கு சண்டை காட்சி நிபுணர்கள், ஆர்ட் டைரக்டர்கள் மற்றும் தொழிலாளிகளை கொண்டது, பெப்சி அமைப்பு. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. வேலை நிறுத்தம் தொடர வேண்டாம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.