

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் சேரன் ட்விட்டரில், முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். உதிரிப்பூக்கள் எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள்.... உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்... நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகிறது.
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில், எங்கள் காலத்தின் ஆகச்சிறந்த படைப்பாளரான மகேந்திரன் அவர்களுக்கு எனது வேண்டுதலும், மரியாதையும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். #DirectorMahendran #RIPMahendran #Mahendran