தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேளிக்கை வரி அழித்துவிடும்: இயக்குனர் சித்ரா லட்சுமணன் கருத்து

தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேளிக்கை வரி அழித்துவிடும் என்று இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேளிக்கை வரி அழித்துவிடும்: இயக்குனர் சித்ரா லட்சுமணன் கருத்து
Published on

ஒவ்வொரு ஆண்டும் தமிழிலே 250 திரைப்படங்கள் வெளியாகின்றதென்றால் அதில் 10 சதவிகித படங்கள்கூட வெற்றிப் படங்களாக அமைவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழக அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் உட்பட எல்லோரும் அறிந்த உண்மை இது.

அனுபவசாலிகள், அறிவாளிகள், வசதியானவர்கள் என பல தரப்பினர் இந்த சினிமா தயாரிப்பில் ஈடுபட்டாலும் அவர்கள் யாராலுமே தொடர்ந்து வெற்றிகளைக் கொடுக்க முடிந்ததில்லை. அதற்கு முக்கியமான காரணம் மற்ற தொழில்களைப் போல வெற்றிக்கான நிரந்தரமான பார்முலா இல்லாத ஒரு நிலையில்லாத தொழிலாக சினிமா இருப்பதுதான்.

சினிமாவிற்கு உள்ள அதீத விளம்பரம், கவர்ச்சி, திடீர் புகழ் ஆகியவைகள்தான் ஆயிரக்கணக்கான மக்களை தினமும் இந்தத் துறைக்குள் இழுத்து வருகிறது.அப்படி வருகின்றவர்களில் ஐந்து சதவீதத்தினர் கூட இங்கே நிலைத்து நிற்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு திரைப்படம் தயாரித்து விட்டு இந்தத் தொழிலை விட்டு ஓடிப்போனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இப்படி நிலையான வெற்றியோ வருமானமோ இல்லாத சினிமா துறையின்மீது அடுக்கடுக்காக வரிகளை விதித்துக் கொண்டிருந்தால் திருவள்ளூவரின் “பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” என்ற வாக்கின்படி தமிழ் சினிமா உலகம் அழிந்து போகும் நிலைதான் ஏற்படும்.

ஏற்கனவே சினிமா டிக்கெட்டுகளின் மீது 18 முதல் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சினிமா டிக்கெட்டுகளின் மீது 30 சதவிகிதம் கேளிக்கை வரியும் விதித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அடியோடு முடங்கிப் போகும்.

இப்போதுதான் உலக சினிமாக்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு தமிழ் சினிமா வளர்ந்து கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து ஊக்குவிக்க வேண்டிய அரசு மேலும் மேலும் வரிச்சுமையை ஏற்றுவது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்?

தமிழக முதல்வர் உடனடியாக இந்த வரி விதிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டு தமிழ் சினிமா உலகைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உதவித் தொகையையும் அவர்களுக்கு தந்து உதவ வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை.

பல தயாரிப்பாளர்கள் மீண்டும் திரைப்படத் தொழிலில் ஈடுபட அந்த உதவித்தொகைதான் விதை நெல் போல உதவியிருக்கின்றது. ஆகவே உடனடியாக அந்த உதவித் தொகையையும் வழங்கி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com