

அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் அக்டோபர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியானது. வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் பெண்ணின் கதை தான் க/பெ ரணசிங்கம்.
முதல் படத்தையே நேர்த்தியாக உருவாக்கியுள்ள பி.விருமாண்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், இயக்குனர் சேரன் படக்குழுவினரை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மண்ணையும் மக்களின் முக உணர்வுகளையும் அச்சு அசலாக பதிவு செய்ததில் இயக்குனரும், மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் தம்பி சண்முகமும் அசுர வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி இருவரின் முகமும் இதுவரை நினைவில். எடுத்துக்கொண்ட கதையும் களமும் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசுவதால் தவிர்க்க இயலாத படமாக என்றும் நிற்கும். படத்தின் இறுதிக்காட்சிதான் முகத்தில் அறைகிறது. மக்களை திசைதிருப்ப அரசியல் எதுவேண்டுமானலும் செய்யும் என சொல்கிறது. அதுவே படத்தின் பலம். நீளம் அதிகம் என்பது பலவீனம்”. இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார்.