பணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி

பணத்துக்காக நடிக்கவில்லை. ரசிகர்கள் பாராட்டுதான் எனக்கு முக்கியம் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
பணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி
Published on

“தமிழில் ‘இறுதி சுற்று’ படத்துக்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்து இருக்கிறேன். விக்ரமாதித்தன், வேதாளம் கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. நான் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி தாதா கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறோம். விஜய் சேதுபதி சிறந்த நடிகர். எளிமையானவர். இயல்பாக அனைவரிடமும் பழகக்கூடியவர்.

படப்பிடிப்புகளில் நான் எப்போதும் பரபரப்பாக இருப்பேன். டைக்ரடர் கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது, எப்படி நடிப்பது என்ற சிந்தனைதான் இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களை கவனிக்க மாட்டேன். ஆனால் விஜய் சேதுபதி தனக்குள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதில் கவனம் வைப்பதுடன் படப்பிடிப்பை காண வந்து இருப்பவர்களிடமும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பார்.

அவரது பழக்கத்தை நானும் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன். நான் மற்ற நடிகர்களைப்போல் ரூ.40 கோடி ரூ.50 கோடி சம்பளம் வாங்கவில்லையே என்று கேட்கிறார்கள். நல்ல திறமைக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு இல்லை. தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிப்பதை விட நல்ல கதையம்சத்தில் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போதும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. எனக்கு போதுமான வசதி இருக்கிறது. எனவே பணத்துக்காக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரசிகர்களிடம் பாராட்டு கிடைக்கும் படங்களில் நடித்த திருப்தி இருந்தால் போதும். அதிக சம்பளம் வாங்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com