ஐஸ்வர்யா ராய் பற்றிய சர்ச்சை ட்விட் - வருத்தம் தெரிவித்த விவேக் ஓபராய்

விவேக் ஓபராய் பதிவிட்ட ட்விட், சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் பற்றிய சர்ச்சை ட்விட் - வருத்தம் தெரிவித்த விவேக் ஓபராய்
Published on

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வெளியிட்டன. தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தனர். கடந்த காலங்களில் கருத்துக் கணிப்புகளின்படி ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்த கருத்துக் கணிப்பு களை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகரும் பா.ஜனதாவின் ஆதரவாளருமான விவேக் ஓபராய், அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று கூறி சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் இருக்கும் படத்தையும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்று கூறி தன்னுடன் ஐஸ்வர்யாராய் இருக்கும் படத்தையும் தேர்தல் முடிவு என்று கூறி அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் முதலில் சல்மான்கானையும் பின்னர் விவேக் ஓபராயையும் காதலித்தார். பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

விவேக் ஓபராயின் இந்த ட்விட்டுக்கு கண்டனங்கள் எழுந்தன. அந்த படத்துக்கு மேல், ‘இது கற்பனைத்திறன். இங்கு அரசியல் இல்லை. வாழ்க்கை மட்டுமே’ என்று எழுதியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் விவேக் ஓபராயின் இந்த ட்விட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய பெண்கள் ஆணையம் அவருக்குக் கண்டனம் தெரிவித்தது.

இந்த சர்ச்சை பெரிதானதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக் ஓபராய், மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் நன் பகிர்ந்ததில் என்ன தவறு? நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான்  செய்ததில் என்ன தவறு என கூறினார்.

இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய மீம்-ஐ நீக்கிவிட்ட விவேக் ஓபராய், ‘ஒருசிலரால் நகைச்சுவையாக பார்க்கக்கூடிய விஷயம் பிறரால் அப்படி பார்க்கப்படுவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2000 பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவியிருக்கிறேன். எனினும், எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com