search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினிமாவிலும் அரசியலிலும் டூப் அறியாதவர்- வைரமுத்து இரங்கல்
    X

    சினிமாவிலும் அரசியலிலும் 'டூப்' அறியாதவர்- வைரமுத்து இரங்கல்

    • 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் விஜயகாந்த்.
    • விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

    ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த நடிகர் விஜயகாந்த். சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்ஷன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.



    பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த், அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.


    தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'சாதிக்கொரு நீதி', 'பட்டணத்து ராஜாக்கள்', 'சாட்சி', 'நீதியின் மறுபக்கம்', 'வசந்தராகம்' எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.


    வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்', 'ஊமை விழிகள்', 'கூலிக்காரன்' , 'உழவன் மகன்', 'தெற்கத்திக் கள்ளன்', 'பூந்தோட்ட காவல் காரன்', 'செந்தூரப்பூவே' 'புலன் விசாரணை', 'சின்ன கவுண்டர்', 'வானத்தைப்போல', 'ரமணா', 'சொக்கத்தங்கம்' என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான 'கேப்டன் பிரபாகரன்' நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.


    இவர் நடிகராக மட்டுமல்லாமல் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


    இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எரிமலை எப்படிப் பொறுக்கும்

    என்ற என் பாடலுக்கு

    உயிர்கொடுத்த கதாநாயகன்

    உயிரிழந்து போனார்

    திரையில் நல்லவர் ;

    அரசியலில் வல்லவர்

    சினிமாவிலும் அரசியலிலும்

    'டூப்' அறியாதவர்

    கலைவாழ்வு பொதுவாழ்வு

    கொடை மூன்றிலும்

    பாசாங்கு இல்லாதவர்

    கலைஞர் ஜெயலலிதா என

    இருபெரும் ஆளுமைகள்

    அரசியல்செய்த காலத்திலேயே

    அரசியலில் குதித்தவர்

    எதிர்க்கட்சித் தலைவர் என்ற

    உயரம் தொட்டவர்

    உள்ளொன்று வைத்துப்

    புறமொன்று பேசாதவரை

    நில்லென்று சொல்லி

    நிறுத்திவிட்டது காலம்

    வருந்துகிறேன்

    கண்ணீர் விடும்

    குடும்பத்தார்க்கும்

    கதறி அழும்

    கட்சித் தொண்டர்களுக்கும்

    என் ஆழ்ந்த இரங்கலைத்

    தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×