search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அறிவு, சந்தோஷ் நாராயணனைத் தொடர்ந்து பதிவு வெளியிட்ட தீ
    X

    தீ

    அறிவு, சந்தோஷ் நாராயணனைத் தொடர்ந்து பதிவு வெளியிட்ட தீ

    • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
    • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

    சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை.

    இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து, அறிவு தான் புறக்கணிக்கப்படுவது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி தீ சார்பில் விளக்கமளிக்கப்பட்ட பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.


    என்ஜாய் எஞ்சாமி

    அதில், "எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.

    இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.

    பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.


    என்ஜாய் எஞ்சாமி

    கடந்த ஆண்டு வெளியான "ரோலிங் ஸ்டோன் இந்தியா" இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது "எஞ்சாயி எஞ்சாமி" பாடலுக்கானதோ அல்லது "நீயே ஒலி" பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மாஜா கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

    செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மாஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.



    Next Story
    ×