என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது.. கௌரி கிஷன்

ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது.. கௌரி கிஷன்
Published on

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'அடியே'. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், '' அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப் படத்தின் கதை சிக்கலானது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுமையான ஒத்துழைப்பால், இப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. 96 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜீ. வி. பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம்.

இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகையும் கூட அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறோம். இது வித்தியாசமாக இருந்தது,'' என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com