search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் கொடுத்த உத்வேகம்.. எந்த அதிகாரியையும் எதிர்கொள்வோம்.. பழங்குடி மக்கள் நெகிழ்ச்சி
    X

    இயக்குனர் கொடுத்த உத்வேகம்.. எந்த அதிகாரியையும் எதிர்கொள்வோம்.. பழங்குடி மக்கள் நெகிழ்ச்சி

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கடுகுதடி புதூர், கோரம்கொம்பு, கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படப்பிடிப்பு நடந்தது.

    படத்தில் இயல்பான காட்சிக்காக உள்ளூர் மக்கள் பலரை இதில் நடிக்க வைத்தனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவுரையின் பேரில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் படக்குழுவினருடன் அவர்கள் நடித்தனர்.

    ஆரம்பத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டிய பழங்குடியின மக்களுக்கு சுமார் 1 மாதம் அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கேமரா முன்பு நடிப்பதாக நினைக்கக்கூடாது. நீங்கல் இயல்பாக ஒருவரிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்களோ அதே போல் பேச வேண்டும். எங்களுக்காக உங்களது பாசை மற்றும் இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் வீட்டிலும், நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலும் எவ்வாறு இருப்பீர்களோ அதே போலவே இருக்கலாம் என்று தைரியம் அளித்தனர்.

    அதன்படி சுமார் 2 மாதமாக இப்பகுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அந்த கிராமத்துக்கு வந்த படக்குழுவினர் படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் தங்க காசு வழங்கியதுடன் கிடா விருந்து அளித்தனர். மேலும் மதுரை பாண்டி கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கும் விருந்தளித்து மதுரையில் உள்ள தியேட்டரில் அனைவரையும் படம் பார்க்க வைத்தனர்.

    இந்த படத்தில் நடித்த பரமேஸ்வரி, மகேஸ்வரி, விஜயகுமார், முருகானந்தம், ரமேஷ் ஆகியோர் இது குறித்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் எங்களை படத்தில் நடிக்க அழைத்தபோது நாங்கள் மறுத்து விட்டோம். ஆனால் படம் பழங்குடியினர் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று தெரிவித்ததால் ஒத்துக் கொண்டோம். எங்கள் ஊரில் சினிமா தியேட்டரே கிடையாது. படம் பார்ப்பது டி.வி.யில் மட்டுமே. சினிமா உலகம் என்றால் எவ்வாறு இருக்கும் என்று கூட தெரியாது. எங்கள் ஊருக்கு ஒரு அதிகாரி வந்தால் கூட அவரை பார்த்துப் பேச பயமாக இருக்கும். ஆனால் டைரக்டர் கொடுத்த உத்வேகத்தால் நாங்கள் சிறப்பாக நடித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    படத்தை திரையில் பார்த்தபோது எங்களுக்கு மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை. இனிமேல் எந்த அதிகாரியையும் நாங்கள் தைரியமுடன் எதிர்கொண்டு பேசுவோம் என்று எண்ணத் தோன்றியுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்டோரை படத்தில் நடிக்க அழைத்து அதில் 25 பேர்களை தேர்வு செய்தனர். தாண்டிக்குடி கிராமத்தில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் திரையில் பார்ப்பதுபோல் இல்லாமல் எங்களுடன் சாதாரணமாக பழகினார்கள்.

    படப்பிடிப்பின் போது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாது அவர்கள் சூட்டிங் நடத்தினார்கள். எங்களுக்கு இது போன்ற பனி எல்லாம் பழகிப்போனது. ஆனால் ஒரு படத்துக்காக எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்பது அவர்கள் எங்கள் ஊரில் எங்களுடன் இருந்த போதுதான் உண்மையாக தெரிந்தது.

    திரையில் படத்தை பார்த்தபோது அவர்களது கஷ்டம் அனைத்தும் விலகி விட்டதாக தெரிவித்தனர். ஒவ்வொரு திரைப்படமும் இது போல்தான் படமாகிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. எங்கள் கிராமத்தை விட்டே வெளியே வராத எங்களை தற்போது உலகறியும் வகையில் திரையில் காட்டிய படக்குழுவினருக்கு எப்போதும் நன்றிக்கடனாக இருப்போம். இனிமேல் அடுத்த படத்தில் நடிக்க அழைத்தாலும் தயக்கமின்றி நடிப்போம் என்றனர்.

    Next Story
    ×