search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணம் வாங்கியது கண்டுபிடிப்பு
    X

    ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி பணம் வாங்கியது கண்டுபிடிப்பு

    • ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்திருந்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது.



    இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் ஆர்.கே. சுரேஷ் கடந்த 5 மாதமாக சென்னை திரும்பாமலேயே உள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து ஆர்.கே.சுரேசின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அப்போது ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதே போன்று மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆசியம்மாள் தலைமையிலான போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×