அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன்.. ஃபகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்த மாரி செல்வராஜ்

நடிகர் ஃபகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.இயக்குனர் மாரி செல்வராஜ், ஃபகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன்.. ஃபகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்த மாரி செல்வராஜ்
Published on

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஃபகத் பாசிலின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இயக்குனர் மாரி செல்வராஜ், ஃபகத் பாசிலுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார் என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com