நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு

‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ் - ஐஸ்வர்யா
Published on

நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை.

இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை(வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் தனுசுக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசுக்கும் சைதாப்பேட்டை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா தனியாக வழக்கு தொடர்ந்து உள்ளனர். அதில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com