மணிப்பூர் சம்பவத்திற்கு தொடர்ந்து வலுக்கும் கண்டனம்.. வைரலாகும் அக்ஷய்குமார் பதிவு

இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மணிப்பூர் சம்பவத்திற்கு தொடர்ந்து வலுக்கும் கண்டனம்.. வைரலாகும் அக்ஷய்குமார் பதிவு
Published on

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com