search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் - ராஜ்கிரண் வேதனை
    X

    ராஜ்கிரண்

    சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் - ராஜ்கிரண் வேதனை

    • ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • நடிகர் ராஜ்கிரணின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சீட்டாட்டம்' என்பது மிக, மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள் அதற்கு அடிமையானவர்கள். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் "எல்லாமே என் ராசா தான்" என்று ஒரு படமே எடுத்தேன். அந்த காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது.


    ராஜ்கிரண்

    "காவல்துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே" என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, "ஆன்லைன் ரம்மி" என்ற பெயரில் காவல் துறையை பற்றிய பயமில்லாமல் எல்லோரும் ஆடலாம் என்றாகி, இந்த சமூக சீர்கேட்டிற்கு பிரபலங்கள் எல்லாம், பாமர மக்களை, ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 37 குடும்பங்கள் பரிதவித்துக்கிடக்கின்றன. தமிழக அரசு இந்த நாசகார, உயிரோடு விளையாடும் விளையாட்டை தடுக்க சட்டம் இயற்றியும், அதை செயல்படுத்த முடியாமல் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.


    ராஜ்கிரண்

    தன்னிச்சையாக இந்த பிரச்சினையை கையிலெடுத்து, இந்த உயிர்பலி விளையாட்டை தடை செய்து, பொதுமக்களை காக்க வேண்டிய நீதிமன்றங்களே, "இது திறன் மேம்பாட்டு விளையாட்டு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? இல்லையெனில் இது அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட, மக்களை ஏமாற்றும் சூது தான் என்பதை நிரூபியுங்கள் என்று கூறுவதாக செய்திகள் வருகின்றன. இது, எதில் போய் முடியுமென்று தெரியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×