திருவண்ணாமலையில் நடிகர் ரஜினி படப்பிடிப்பு.. தீவிரம் காட்டும் படக்குழு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
திருவண்ணாமலையில் நடிகர் ரஜினி படப்பிடிப்பு.. தீவிரம் காட்டும் படக்குழு
Published on

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், லால்சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் முக்கிய காட்சிகள் திருவண்ணாமலையை சுற்றி உள்ள சில பகுதிகளிலும், செஞ்சி சுற்று வட்டார கிராமங்களிலும் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக, நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். தனியார் விருந்தினர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள ஊத்தாம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

ரஜினியின் படபிடிப்பு நடப்பதால் அங்கு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்ட ரஜினிகாந்த், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார். எனவே, லால்சலாம் படபிடிப்பு முடியும் போது அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்வார் எனவும், கிரிவலம் செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com