

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுரேஷ் காமாட்சி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் அப்பா மறைந்துவிட்டார் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. சினிமாவில் தனது தொடக்க காலத்திலிருந்து ஒவ்வொரு தடைக்கற்களையும் உடைத்து சாதனைகளாக மாற்றிக்கொண்ட மாமனிதர்.
எச்சூழ்நிலையிலுமிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவார்.
இப்போதும், இவ்வுடல் நிலையின் இயலாமையை முறியடித்து நீண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன். என் மனம் சிதறச் சிதற சிறகடித்துப் பறந்துவிட்டீர்களே அப்பா. எத்தனை உயரம் தொட்டவராக இருந்தும் எனக்கென ஒரு தனிச் சிரிப்பு, தனித் தோழமை, தன் கிரீடம் தொலைத்த அன்பனாய் பழகினீர்களே?! உயிராய் இருந்தீர்களே?!
இப்படிக் கடந்து போவீர்கள் என எண்ணிப் பார்க்கவே இல்லை. முதுமையை வென்ற இளைஞராகவல்லவா உங்களைக் கண்டுகளித்திருக்கிறேன். கிண்டலும் செய்திருக்கிறேன். அதற்கு போடா நான் உங்களெல்லாரையும் விட இளைஞன் என பதில் கமெண்ட் அடித்துவிட்டுப் போவீர்களே?! இனி அந்த இளைஞனை எங்கு காண்பேன்?!
எப்போதும் இயக்கும் கனவு உங்களை விட்டுப் போனதில்லை. மருத்துவமனையிலிருந்தாலும் படம் செய்வதைப் பேசிக்கொண்டே இருப்பார். தமிழ் சினிமாவின் பொக்கிஷத்தை இன்று காலன் திருடிவிட்டான். நேசத்தின் மனிதனை எடுத்துக் கொண்டுவிட்டான். மோதிரக் கை விரலோனை அழைத்துக் கொண்டுவிட்டான். துயருறுகிறது. தமிழ் சினிமாவின் பெருங்காவியம் இப்போது இல்லை. ஆனால் அவர் செய்த காவியங்கள் காலத்தால் அழியாதவை.
படைப்பு என்றால் என்ன என்று பாடம் எடுத்தவர். புதிய புதிய முகங்களை வார்த்தெடுத்தவர். இயக்கம், நடிப்பு, சங்கப் பொறுப்பு என சக்கரமாய் சுழன்றவர். அவரின் காலடித் தடங்கள் தான் இன்று வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி. அறைக்குள் அடங்கிக் கிடந்த சினிமாவை இயற்கைக்குள் அழைத்துப் போனவரை இன்று இயற்கை தன்னை இயக்க அழைத்துக் கொண்டது போலும். நேச மனிதனே.. பாச அப்பனே ஒருபோதும் நெஞ்சை விட்டு அகலமாட்டீர்கள். பொதிந்துகொள்கிறேன்.
இறை மடியில் இளைப்பாருங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சினிமா உறவுகள், அவரை நேசிக்கும் இரசிகர்கள் அனைவருக்கும் ஆறுதலைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.