ஜி.வி. பிரகாஷ்-க்கு தங்க சங்கிலி பரிசளித்த பாடகர் வேல்முருகன்!

உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் அளவிற்கு வேல்முருகன் பிரபலமானார்.
ஜி.வி. பிரகாஷ்-க்கு தங்க சங்கிலி பரிசளித்த பாடகர் வேல்முருகன்!
Published on

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாளை ஒட்டி பின்னணி பாடகர் வேல்முருகன் சிறப்பு பரிசு வழங்கியுள்ளார். திரையுலகில் ஜி.வி. பிரகாஷ் குமார் 100 படங்களை தாண்டி இசை அமைப்பதைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளில் '100 ஃபிலிம்ஸ் ஜி.வி சார் ' (100 Films GV Sir)என்ற முத்திரை பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை படாகர் வேல்முருகன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தனது அன்பின் அடையாளமாக அணிவித்தார்.

நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனிப்பெயர் பெற்றிருக்கும் வேல்முருகன் ஏற்கெனவே சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். எனினும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தான் பெரிய வெளிச்சம் கிடைத்து ஓர் அங்கீகாரம் பெற்ற பாடகராகி பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் அளவிற்கு வேல்முருகன் பிரபலமானார்.

அன்று இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் போட்ட அடித்தளத்தின் விளைவாகத்தான் ஆயிரம் பாடல்கள் பாடி 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து இசைத்துறையில் பயணம் செய்து வருவதாக கூறுகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வேல்முருகன் பாடிய 'ஆடுகளம்' படத்தில் வந்த 'ஒத்த சொல்லால' பாடல், 'சகுனி'யில் வந்த 'போட்டது பத்தல', 'கொம்பனி'ல் 'கருப்பு நிறத்தழகி',

'அசுரனில் 'கத்தரிப் பூவழகி' போன்ற பல பாடல்கள் பெரிய வெற்றி பெற்றன.

இது பற்றி வேல்முருகன் கூறும்போது, "எனக்கு 'ஆடுகளம்' தொடங்கி 'சகுனி', 'கொம்பன்', 'செம', 'அசுரன்', 'யானை', 'வீர தீர சூரன்', 'தாண்டவம்', 'மீண்டும் ஒரு காதல் கதை', ' ரெபல்' என்று தொடர்ந்து அண்மையில் பெரிய வெற்றி பெற்ற 'பராசக்தி' வரை 25 படங்கள் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து என் வாழ்வில் ஒளியேற்றி வைத்த எனது அன்புக்குரிய இசையமைப்பாளருக்கு என் நன்றியைத் தெரிவிக்கும் வகையில்தான் நான் இன்று அவரை வாழ்த்தி விட்டு வந்தேன்.

இன்று நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என்றால் அதற்குக் காரணம் அவர் கொடுத்த பாடல் வாய்ப்புகள் தான் என்றால் அது பொய்யில்லை. அவருக்கு என்னால் எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. என் அன்பை மட்டுமே அவரது பிறந்தநாளில் வெளிப்படுத்தினேன். இன்று அவரை சந்தித்தது பெரிதும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது." என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com