பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் குடும்ப விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயார் ஊடகங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய தாயார், தங்கள் குடும்பத்தின் மீதும், தங்களின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்குக் கடுமையான மறுப்பு தெரிவித்தார்.
"எந்த ஒரு தாயும் தன் பிள்ளைகளைப் பிரிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டாள். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாகவோ அல்லது ரகசியமாகவோ திருமணம் செய்து வைக்கவில்லை.
சுமார் 10,000 பேரை நேரில் அழைத்து, 10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்தித்தான் முறைப்படி இந்தத் திருமணத்தை நடத்தினோம். அப்படி இருக்கும்போது, நாங்கள் ஏன் அவர்களைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கப் போகிறோம்?" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தத் குடும்பப் பிரச்சனை தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"இந்த மாதம் முதல் ஆர்த்தி, ரவி மோகன் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆரவ் மற்றும் அயான் ஆகியோர் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து பேச வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இதுதான் பெற்றோர்களான எங்களுக்கும் இருக்கும் ஆசை நாங்களாக அவர்களை பிரிக்க வேண்டும் என்று ஒரு முறை கூட நினைத்து இல்லை. தங்களுக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு, "இப்படி ஒரு நல்ல தீர்ப்பைக் கொடுத்ததற்காக அந்த நீதிபதிக்கு எனது பெரிய கும்பிடு" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இடையே நிலவி வந்த குடும்பக் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் அண்மையில் முக்கிய தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகக் கருதும் ஆர்த்தியின் தாயார், தங்கள் குடும்பத்தின் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.